Thursday, 8 March 2012

" புதிரை வண்ணார் நல வாரியத்திர்க்கான போராட்டங்கள்


இரண்டாயிரம் ஆண்டுகாலத் தமிழ்ச் சாதியச் சமூகத்தில் சேரி வண்ணான், புரத வண்ணான், ஹரிஜன வண்ணான், கீழ்சாதி வண்ணான், ஆதி வண்ணான், ஆதிதிராவிட வண்ணான், சேரிநேசன், இரவாலி, புதிர வண்ணான், பற ஏகாலி, மாலோடு, அகஸன், நீஸான் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் துரும்பர்களுக்குத் தமிழ்நாடு அரசு நலவாரியம் அமைத்திருப்பதை மக்கள் இயக்கத்தின், சலவைத் தொழிலாளர் நலக்குழுவின் 30 ஆண்டுகாலப் போராட்டம் மூலம் பெற்ற வெற்றி என நாங்கள் உறுதியாகச் சொல்கிறோம்.
தமிழக அரசு புதிரை வண்ணார் நல வாரியம் அமைத்துவிட்டதாலேயே அவர்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் அல்லது தீர்க்கப்பட்டுவிடுமெனச் சலவைத் தொழிலாளர் நலக்குழுவோ துரும்பர் விடுதலை இயக்கமோ கருதவில்லை. தற்போது அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நலவாரியங்கள் எவ்வாறு போதாக் குறையான நடைமுறைகளோடு இயங்கி வருகின்றன என்பதைத் துரும்பர் விடுதலை இயக்கம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. புதிரை வண்ணார்களின் ஒன்றுபட்ட, இணைந்த, நீடித்தத் தொடர் போராட்டங்களின் மூலம்தான் அவர்களின் தேவைகளை வென்றெடுக்க முடியும். ஏதோ புனித ஆவி கலைஞர் மீதோ ரவிக்குமார்மீதோ, இமையத்தின் மீதோ இறங்கி, அவர்களை ஆசீர்வதித்து இவ்வாறு ஒரே நாளில் புதிரை வண்ணார்களுக்கு நலவாரியம் அமைக்க அருள்பாலித்துவிடவில்லை. வரலாற்றில் தனிநபர்களின் முயற்சி என்பது மிகக் கொஞ்சமே. தனிநபர்கள் வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்க முடியாது. அதற்கு உதவலாம். வெகுசன மக்களும் அவர்களின் போராட்டமும்தான் வரலாற்றின் திசை வழியைத் தீர்மானிக்கின்றன. நலவாரியம் அமைத்ததால் கலைஞர், ரவிக்குமார், இமயம் போன்றவர்களின் பங்கை மட்டும் முன்னிலைப்படுத்தி, 7 லட்சம் புதிரை வண்ணார்களின் பாத்திரத்தை அ. ராமசாமி குறைத்து மதிப்பிட்டுள்ளதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
பன்னெடும் தலைமுறைகளாகவே மேல்சாதி இந்துக்களாலும் தலித் மக்களாலும் தொடர்ந்து சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் புதிரை வண்ணார் இனப் பெண்கள்மீது பாலியல் வல்லுறவு நிகழ்த்தப்பட்டும் கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்துச் சமூக உரிமைகளும் பல நூறு ஆண்டுகளாக மறுக்கப்பட்டும் வந்ததோடு, இந்து மனுதர்மம் புதிரை வண்ணார்களைப் பார்த்தாலே தீட்டு எனச் சொல்லி அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் மற்றும் மேல் சாதியினர் கட்டளையிடுகின்ற கூலியற்ற வேலைகளையும் இரவிலேயே செய்ய வைத்து, பகலில் மற்ற சமூக மக்களோடு பழகத் தடைவிதித்து, தொடர்ந்து அவர்களை இந்து மதம் ஒடுக்கிவைத்துள்ளது. இதை அம்பேத்கர் தனது பேச்சும் எழுத்தும் தொகுதி- 6 பக்கம் 126இல் உறுதிப்படுத்தியுள்ளார். தலித்துகளிலேயே தாழ்த்தப்பட்டோர்களிலேயே பெரும்பான்மையினராகவும் மேல்சாதியினராகவும் உள்ள வள்ளுவர், பள்ளர், பறையர் மற்றும் அருந்ததியர் ஆகியோர் தங்களுக்குத் துணி வெளுக்கவும் முடி திருத்தவும் புதிரை வண்ணார்களைப் பயன்படுத்திக்கொண்டு, மற்ற சேவைத் துறை வேலைகளையும் செய்ய வைப்பதோடு சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எத்தகைய தீமைகள், கொடுமைகள் செய்தனரோ, செய்து வருகின்றனரோ, அதே தீமையையும் கொடுமைகளையும் கொஞ்சமும் குறையாமல் புதிரை வண்ணார்களுக்குத் தாழ்த்தப்பட்டோர் செய்து வருகின்றனர்.
சென்னை மாகாணச் சட்ட மன்றத்தில் 1932ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த நீதிக்கட்சி, புதிரை வண்ணார்மீதான வன்முறையைத் தடுக்கவும் சமூகத்திலிருந்து அவர்களை ஒதுக்கிவைப்பதையும் சட்டபூர்வமாகத் தடைசெய்ததோடல்லாமல் இச்சட்டத்தை மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என அறிவித்து, பார்த்தாலே தீட்டு என்ற கொடுமையிலிருந்து புதிரை வண்ணார்கள் மீள வழிவகுத்தது. ஆனாலும், மற்றைய சமூகக் கொடுமைகள், பிரச்சினைகள் தொடரவே செய்தன. சமூகத்தில் இன்றும் பல்வேறு வகையான கொடுமைகளிலிருந்தும் மீளமுடியாதவர்களாக, தாழ்த்தப்பட்டவர்களிலேயே மிகவும் மோசமான தாழ்த்தப்பட்டவர்களாக இன்றுவரை புதிரை வண்ணார்கள் வாழ்ந்து வருகின்றனர்.
புதிரை வண்ணார்களுக்கு நலவாரியம் அமைக்க தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் நலக்குழு 1983 இலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. அவர்களின் விடுதலைக்காகக் கீழ்க்காணும் கோரிக்கைகளை முன் வைத்து இன்றுவரை தொடர்ந்து போராடி வருகின்றது.
1. அரசுத் துறைகளில் சமரசமற்ற முறையில் வேலைவாய்ப்பு கிடைக்க கட்டாயம் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
2. புதிரை வண்ணார்களுக்கு என்று தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
3. மாற்றுத் தொழில் செய்வதற்குத் தாட்கோ மூலமாகக் கடன் உதவி கிடைக்க நிதி ஒதுக்கீடு செய்யத் தனித் திட்டம் வகுக்க வேண்டும்.
4. மாநிலம் முழுக்க உள்ள புதிரை வண்ணார்களைக் கணக்கெடுத்து அடையாளப்படுத்த வேண்டும்.
5. எல்லா ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில், வணிக வளாகங்களில் கட்டாயம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
6. எல்லாக் கிராம, சேரிப் பகுதிகளில் உள்ள மதம் மாறிய புதிரை வண்ணார்கள் உள்பட அனைவருக்கும் கட்டாயமாகத் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும்.
7. விவசாயத் தொழிலாளர்களின் புதிரை வண்ணார்களின் குடும்பத்திற்குக் கட்டாயமாக 2 ஏக்கர் இலவச நிலம் கொடுக்க வேண்டும்.
8. புதிரை வண்ணார் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டும்.
9. தமிழகம் முழுக்கச் சேரிப் பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடர்களில், சலவை மற்றும் சவரத் தொழில் செய்வோருக்குப் புதிரை வண்ணார் என சாதிச் சான்று வழங்கச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
10. புதிரை வண்ணார்களின் குடும்பங்களில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் லஞ்சமில்லாமல் கணிப்பொறி வழங்க வேண்டும்.
11. புதிரை வண்ணார்களின் பிள்ளைகளுக்குத் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்விவரையில் பயில அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
12. தமிழகத்தில் உள்ள எல்லாக் கிராமங்களிலும் ஆதிதிராவிட சலவை மற்றும் சவரத் தொழிலாளர்களுக்கு இடுகாட்டுப் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. அதை முறைப்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும்.
எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துத் தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் நலக்குழு சார்பில் புதிரை வண்ணார்களுக்கு என்று முதன்முதலாக அனைத்திந்திய அளவில் திருவண்ணாமலையில் ஆகஸ்டு 28, 2003இல் முதல் மாநாடு நடத்தப்பட்டு, புதிரை வண்ணார்களுக்கு என்று உள்ள பிரத்தியோகமான பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லத் தீர்மானித்துத் துரும்பர் விடுதலை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர்ந்து போராடிவருகிறது. தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருவண்ணாமலையில் 9ஆவது மாநில மாநாட்டோடு இணைந்து டிசம்பர், 18, 2004 அன்று கலை இலக்கிய இரவு மேடையில் புதிரை வண்ணார் எழுச்சி மலரைப் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் வெளியிட ஸ்டாலின் குணசேகரன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து விழுப்புரத்தில் நவம்பர் 15, 2003இல் 2ஆம் மாநாடும் இராமநாதபுரத்தில் ஏப்ரல் 3, 2004இல் மூன்றாம் மாநாடும் நடத்திப் புதிரை வண்ணார் இன மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்றதில் சலவைத் தொழிலாளர் நலக்குழுவுக்கும் துரும்பர் விடுதலை இயக்கத்திற்கும் மிகப் பெரிய பங்கு உண்டு.
விழுப்புரம் மாநாடு தவிர்த்து மற்ற இரண்டு மாநாடுகளிலும் சமூக ஆர்வலரும் இந்திய ஆட்சிப்பணியில் இருப்பவருமான கண்ணகி பாக்கியநாதன் கலந்துகொண்டுள்ளார். இன்றளவும் புதிரை வண்ணார்களின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றன, சலவைத் தொழிலாளர் நலக்குழுவும் துரும்பர் விடுதலை இயக்கமும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மூலம் புதிரை வண்ணார்கள் நலவாரியம் அமைக்கக் கோரியதையும் தமிழக முதல்வர் அதை ஏற்றுக்கொண்டு புதிரை வண்ணார் நலவாரியம் அமைக்கப்படும் என உறுதியளித்ததையும் துரும்பர் விடுதலை இயக்கம் மன மார்ந்த முறையில் வரவேற்கிறது, பாராட்டுகிறது, வாழ்த்துகிறது. அதேசமயத்தில் நலவாரியத்திற்கெனத் தனி நிதி ஒதுக்கீடோ, மாநில, மாவட்ட அளவிலான வாரிய அலுவலகங்கள் அமைக்க எந்த வகையான ஏற்பாடோ வாரியத்தின் அதிகாரச் செயல்பாடு முறைகள் குறித்தோ முதல்வரின் அறிவிப்பில் தெளிவாக வரையறுத்துக் கூறப்படவில்லை. நலவாரியம் எந்தத் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்பதையும் முதல்வர் தனது அறிவிப்பில் கூறவில்லை. எனவே, இவற்றைச் சரியான முறையில் அமல்படுத்த சலவைத் தொழிலாளர் நலக்குழு, துரும்பர் விடுதலை இயக்கம் தொடர்ந்து போராட்டத்தை நடத்தும், இது ஏதோ கலைஞர் ஆட்சிக் காலத்தில் மட்டுமே இதற்கான முகாந்திரம் ஏற்பட்டுவிடவில்லை.
கடந்த 2001-2005ஆம் ஆண்டுகளில் ஆட்சியிலிருந்த ஜெயலலிதா தன் ஆட்சிக் காலத்தின்போது புதிரை வண்ணார்கள் பிரச்சினையை விரைவில் தீர்ப்பதாகச் சங்க நிர்வாகிகளிடம் உறுதியளித்திருந்தார். பிரபல ஆங்கில வார ஏடான தெஹல்காவில் 30.07.2005 முதல் 27.08.2005 வரை சென்னை நிருபரான பி. சி. வினோஜ் குமார், புதிரை வண்ணார்கள் குறித்து எழுதிய கட்டுரையின் தாக்கத்தின் மூலம் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையின் காரணமாகத் தமிழ்நாட்டில் உள்ள புதிரை வண்ணார்கள் மற்றும் அவர்களின் சமூக விடுதலைக்காகக் களப்பணி ஆற்றிவரும் தலைவர்களை அழைத்துப் பேசி அவர்களுக்கான பிரச்சினைகள் குறித்துப் பதிவுசெய்யப்பட்டது. ஆட்சி மாற்றத்தின் காரணமாக அவரால் அமல்படுத்தப்படாத புதிரை வண்ணார்கள் நலவாரியத்தைத் தற்போது கலைஞர் அமைத்துள்ளார். நலவாரியம் அமைத்திருக்கிற அதே சமயத்தில் புதிரை வண்ணார்கள் இன மக்களுக்கே என்று உள்ள பல்வேறு பிரத்யேகமான பிரச்சினைகளான கல்வி, இட ஒதுக்கீடு, சாதிச் சான்று, அரசு, தனியார் வேலைவாய்ப்புகள், தாட்கோ கடன் வசதி, தீண்டாமை, தீண்டாமைக்குள் தீண்டாமை, பெண்கள்மீது நிகழ்த்தப்படும் பாலியல் வல்லுறவு ஆகியவற்றைச் சரிசெய்ய பெரியார் வழிவந்த, அண்ணாவின் வழிவந்த கலைஞர் அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும் எனச் சலவைத் தொழிலாளர் நலக்குழு, துரும்பர் விடுதலை இயக்கம் அக்கறையோடு கேட்டுக்கொள்கிறது.
கத்தோலிக்க திருச் சபையின் ஒரு பிரிவான செலேசியன் சபையின் சென்னை மாநில தொண் போஸ்கோ செலேசியன் சபை, நலவாரியம் அமைப்பதற்கான போராட்டங்களில் மிகப் பெரும் உதவிகளையும் தனது கூடுதலான பங்களிப்பையும் ஆற்றியுள்ளதைச் சலவைத் தொழிலாளர் நலக் குழு, துரும்பர் விடுதலை இயக்கம் நன்றியோடு நினைவுகூர்கிறது.
மேற்கண்ட இவ்வரலாறு எதையும் சுட்டிக்காட்டாமல் அ. ராமசாமி, ஆகஸ்ட் 2009 காலச்சுவடு இதழில் இமையத்தால் எழுதப்பட்ட கோவோறு கழுதைகள், ஆறுமுகம், செடல் ஆகிய நாவல்கள் தாம் தமிழக அரசைப் புதிரை வண்ணார் நலவாரியம் அமைக்க உதவியதாக, தூண்டுதலாக அமைந்தது எனக் கூறியிருப்பது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த கதையாக உள்ளது. 1993க்குப் பிறகு எழுதிய இந்நாவல்களில் கிருத்துவத்திற்கு மதம் மாறிய வடதமிழகப் பற வண்ணார்கள் இன மக்களின் அவலங்களை, துன்பங்களை, பிரச்சினைகளை, ஆசைகளை, விருப்பங்களை, பாலியல் உறவுகளை, தோல்விகளை இமையம் நன்றாகப் பதிவுசெய்திருக்கிறார் (தலித் பிரிவில் ஒரு பிரிவினர் அன்று இந்நாவல்களை ஏற்றுக்கொள்ளவில்லையென்றபோதிலும்) தமிழ் இலக்கிய உலகில் ஒரு சிறு பகுதியினர் மட்டுமே வாசித்துள்ள இந்நாவல்கள், அவர்களுக்கிடையே மட்டுமே பரபரப்பாகப் பேசப்பட்டு, பின்னர் இந்நாவல்களைப் பேசத் தமிழ் இலக்கிய உலகம் மறந்துவிட்ட நிலையிலும் ரவிக்குமார் சார்ந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியே கூட ஆரம்ப காலங்களில் இந்நாவல்களை தலித்தியத்திற்கு எதிரானதென்றும் அவர்களுக்கிடையே பிரிவினைகளை உருவாக்க சாதி இந்துக்கள், இமையம் போன்றவர்கள் முயல்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டியதைத் தமிழக மக்களும் வாசகர்களும் அவ்வளவு எளிதில் மறந்துவிடவில்லை என அ. ராமசாமிக்கு நினைவூட்டுகிறோம்.
1993இல் கோவேறு கழுதைகள் வெளிவந்து மூன்று ஆண்டுகள் கழித்து 1996இல் தி.மு.க ஆட்சிப் பீடமேறியது அப்போதும் கலைஞர்தான் முதல்வராக இருந்தார். அந்த 5 ஆண்டு கால ஆட்சியில் ஏன் புதிரை வண்ணார்கள் நலவாரியத்தைக் கலைஞர் அமைக்கவில்லை? அதை அமைக்க எந்தவிதமான தடைகள் அவருக்கு இருந்தன? 1996-2001 ஆட்சிக் காலத்தில் புதிரை வண்ணார் நலவாரியம் அமைக்க முடியாத கலைஞருக்குத் தற்போது நலவாரியம் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதற்குப் புதிரை வண்ணார் இன மக்களின் போராட்டமே காரணம். மேற்கண்ட கேள்விகளுக்கு அ. ராமசாமி பதில் கூறுவாரா? தனது கட்டுரையில் இவ்விவரங்களைத் தராமல் தவிர்த்து இமையத்திற்கு ஏன் வக்காலத்து வாங்குகிறார்? கோவேறு கழுதைகள் நாவல் தலித் பிரிவில் ஒரு பகுதியினர் எதிர்த்ததைக் குறிப்பிடும் அ. ராமசாமி அதற்கான காரணங்களைக் குறிப்பிடவில்லை? மற்ற சேவைத் துறையில் சாதியினர் அனைவரும் மேல்சாதி யாரால் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் எனக் குறிப்பிட்ட அவர், சாதிப் படி நிலையில் தலித்துகளுக்குக் கீழாக உள்ள புதிரை வண்ணார்கள் எவ்வாறு சுரண்டப்பட்டும் கொடுமைகளுக்கும் ஆளாகி வந்ததை, வருவதை ஏன் குறிப்பிடவில்லை? வேண்டும் என்றே தவிர்த்து விட்டாரா? (அல்லது) அதை எழுத அ. ராமசாமிக்கு மனமில்லையா? மேலும் தான் மட்டுமே செய்தித்தாள்களை வெகு கவனமாகப் படிப்பது போலவும் மற்றைய தமிழ் வாசகர்கள் ஏனோதானோ என்று வாசிப்பது போலவும் தனது கட்டுரையைத் தொடங்கியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. தமிழக வெகுஜன வாசகத் தளத்தைக் கேலி செய்யும் விஷயமாக இருக்கிறது இது?
தமிழ்த் தொலைக்காட்சிகளில் செய்தியாகவும் சன் டிவி, கலைஞர் செய்திச்சேனல்களில் இரண்டு நாட்கள் தொடர்ந்து புதிரை வண்ணார் நலவாரியம் அமைக்கப்பட்ட தகவல் செய்தியாக வாசிக்கப்பட்டதைத் தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான தொலைக்காட்சிப் பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள் என்பதையும் அ. ராமசாமி வசதியாக மறந்துவிட்டாரெனக் கட்டுரையாளருக்கு ஞாபகப்படுத்துகிறோம். இமையம் தனது நாவல்களில் தமிழக வடமாவட்டங்களில் உள்ள கிருத்துவத்திற்கு மதம் மாறிய பற வண்ணார் சமூகத்தைப் பற்றிப் பதிவுசெய்திருக்கிறாரே தவிர, தலித் மக்களுக்கும் கீழாக உள்ள தலித் மக்களுக்கு சேவைத் துறை வேலைகள் செய்து வருகின்ற, தலித் மக்களால் உள் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுகின்ற தென் தமிழகப் புதிரை வண்ணார்களைப் பற்றித் தனது நாவல்களில் எங்குமே குறிப்பிடவில்லை. இந்நிலையில் ஒட்டுமொத்தத் தமிழகம் முழுவதும் உள்ள புதிரை வண்ணார்களின் சமூகத்திற்கு நலவாரியம் அமைத்திருப்பதற்கும் இமையத்தின் நாவல்களுக்கும் எவ்வகையிலான தொடர்பு இருக்கிற தென்பதை அ. ராமசாமி விளக்குவாரா? இந்திய, தமிழ்ச் சமூகத்தில் நீடித்து வருகின்ற சாதிய அமைப்பு முறையும் அதற்குள்ளாகவே நிலவிவருகின்ற பல்வேறு உள்சாதி அமைப்புகளையும் அ. ராமசாமி புரிந்துகொள்ள முயல வேண்டும்.
த. ம. பிரகாஷ்
திருவண்ணாமலை

No comments:

Post a Comment